இரச வாதத்தை பற்றி அகத்தியரின் கருத்தாக வகார சூத்திரம் 10

பாரப்பா வாதி என்றால் பூசை வேணும்             1 
பரிவான சிவம் வேண்டிதியானம் வேணும்
நேரப்பா வாசி என்றால் யோகம் வேணும்
நெடுகவே லெட்சியத்தை நிறுத்த வேணுங்
காரப்பா குரு பதத்தை கார்க்க வேணும்
கைகாட்டி தொழில் முறையை யறிய வேணுஞ்
சாரப்பா சாஸ்த்திரஞ் சூத்திரமுங் கண்டு
சார்வாகக் காத்திருந்து வாதம் பாரே


பாரப்பா வாதத்தில் லட்சம் காப்பு                  2
பாடினேன் அதை குறுக்கி இருநூற்றுக்கு!
பாரப்பா ஆதி குரு வழலை மார்க்க
படைவாக சொல்லி விட்டேன் முப்பூவைத்தான்
நேரப்பா முன்னூறில் அடுக்கி விட்டேன்
நேர்மை என்ன ஐம்பதிலே நிஜமாய்ப்பாரு
ஆரப்பா அதை அடக்கி பதினாருக்குள்
ஆச்சரியம் பதிமூன்றும் பத்தும் பாரே


பாரப்பா ஆங்காங்கே சொன்னதெல்லாம்             3
பரிவாக கண்டிருந்து முடிக்க வேண்டும்
பாரப்பா சருகிடையும் கருக்கிடையும் கண்டு
திடமாக செய்தாக்கால் முப்பூவாகும்.
ஆரப்பா என்னைப்போல் சொல்லப்போறார்
அச்சரியம் மானிடர்க்கு நோய்தான் தீர
எரப்பா அண்ட ஓட்டை சுத்தி செய்த
மேதினியில் கற்சுண்ணம் உவரும் கூட்டே


கூட்டியே அமுரியுடன் கலக்கிக் கொண்டே        4
குமுறவே காய்ச்சிவிட சுத்தியாச்சே!
ஆட்டியே படிக்கமோடு உப்பும் கூட்டி
அழகான உகாரமுடன் சாரம் சேர்த்து
தீட்டியே வெள்ளையோடு வீரம் தானும்
திடமாக சரி எடையாய் தூக்கிகொண்டு
காட்டியே கல்வத்தில் விட்டு ஆட்ட
கலங்காத வெல்லெருக்கன் பாலை வாங்கே     


வார்த்து நீ அரைத்திடுவாய் மைபோலாட்டி       5
வாகாக வில்லை செய்து காயப்போடே
சேர்த்து நீ ஓட்டில் வைத்து ஒடு மூடி
திடமுறவே கெஜ புடத்தில் நீரிப்போகும்
பார்த்து நீ வேதத்தை விட்டு ஆட்டி
பாதையால் வில்லை செய்து ரவியில் போடு
சாத்து நீ ஒட்டில் ஒடு மூடி
சதிராக முன்போல புடத்தை போடே


போடப்பா சூட்சத்தில் குருவுமாச்சு               6
பொல்லாத பிள்ளைக்கு சொல்ல வேண்டாம்
ஆடப்பா கண்டத்தில் சாரம் கூட்டி
அப்பனே சலமாகும் சலத்தை விட்டு
தேடப்பா நாகத்தை உருக்கி சாய்க்க
திடமாக நாகமது கட்டிப்போமே
சூடப்பா செம்பு வெள்ளி கழஞ்சிக்கித்தான்
சுகமாக எட்டில் ஒன்றாய் தாக்குத்தாக்கே!


தாக்கியே பார்த்தாக்கால் ஏழரையும் காணும்     7
தயவாக வங்கத்தை குத்தி ஊது
நோக்கியே இதை கண்டு செலவு செய்து
நுணுக்கமாய் முப்பூவை பிறகு பாரு
ஆக்கியே சூட்சுமத்தில் முப்பூவாகும்
அல்லாட்டால் முப்பூவில் நன்மை இல்லை
தூக்கியே இதை எடுத்து வைத்துக்கொண்டு
துயராலே ஜெயநீரால் எல்லாம் கட்டே!


கட்டியே தனித்தனியே வேதை பாரு            8
கசடருக்கு சொல்லாதே காயம் பாழாம்
நிஷ்டையிலே இருந்து கொண்டு தியானம் பண்ணு
நினைவு தப்பி இருந்தாக்கால் எல்லாம் போகும்
கட்டையிலே வாலையை பூசை பண்ணு
கண்மூக்கு மத்தியிலே கருதிப்பாரு
முட்டையிலே தலை கவிழ்ந்து குனிய வேணாம்
மூர்க்கமுள்ள முப்பூவின் முறையை பாரே...!


பார்க்கையிலே சட்டைமுனி மகன்தானப்பா     9
பரிவாக கண்டறிந்து பார்த்துகொண்டான்
சேர்க்கையிலே சூத்திரத்தின் செயநீருக்குள்ளே
செயலாக கல்லுப்பை வைத்து ஆட்டு
நார்கமழத்தாயாராம் பதியை கண்டு
நளினமுடன் சதாசிவத்தின் குறியில் நின்று
நேர்கையிலேதிரிகோண தைலத்தை குத்தி
நேர்மையாய் ஊதிடவே கட்டிப்போமே..


போமடா கரிஓட்டில் ஊதும் போது           10
போக்காக கண்விட்டு ஆடும் ஆடும்
ஆமடா கல்லுப்பை கட்டி ஊத
ஆகாகா வைரமணி போலே ஆடும்!
நாமடா ஆவைத்தால் வெளியில் விட்டேன்
காட்டாதே கள்ளர் என்ற மானிடற்க்கு
பாமடா இதுவெல்லாம் அறிந்துகொண்டு
தாரணியில் நில்லாதே அடக்கமுற்றே.           முற்றும்
 

இனிய பக்தி பாடல்கள்,
பக்தி சொற் பொழிவுகள்,
பக்தி திரைப்படங்கள்,
கர்நாடக இசை
போன்றவைகளை
காணொளியில்
கண்டு கேட்டு மகிழுங்கள்

சித்தர் பாடல்கள்

பக்தி பாடல்கள்

ஆன்மீக சொற்பொழிவுகள்

பக்தி திரைப்படங்கள்

கர்நாடக இசை

இணைய வானொலி

அன்பன்
அ இராகவன்


 September 6th, 2011 அன்று புதிய பதிவுடன்
©-2024 - தெய்வீக சித்தமார்க்கம்